Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

பயணம்

வகுப்பறையில் பாடத்தில் மனம் செல்லாத பொழுது கிறுக்கியவற்றில் மற்றொன்று …

———————————————————————————————————–

காலத்தின் ஓட்டத்தோடு,
எல்லைகள் மாறக் கண்டேன்.
நேரம் அது செல்ல செல்ல,
இலக்கணங்கள் மழுவக் கண்டேன்.
நாட்கள் மெல்ல நகர,
நிஜத்தை ஏற்று நின்றேன்.
மாற்றத்தின் மாற்றத்தில்,
உறவுகளைத் தாங்கிக் கொண்டேன்.
இனிமையின் வடிவம் மாற,
மகிழ்ச்சியின் வண்ணம் கலங்க,
ஆணிவேர் அது ஆழ்ந்து நிற்க,
பயணத்தை இனிதே தொடர்ந்தேன்!!!

வகுப்பறையில் பாடத்தில் மனம் செல்லாத பொழுது கிறுக்கியவற்றில் ஒன்று…

———————————————————————————————————–

கனவில் கூட காணா தீவு தன்னைக் கண்டேன்
மகிழ்வேன் என்று எண்ணி, துள்ளி குதித்துத் திறிந்தேன்
எத்திக்கும் ஆளிருந்தும், நான் மட்டும் எனக்கிருந்தேன்
நூறு கோடி சொல்லிருந்தும் மௌனத்தில் புதைந்துக் கொண்டேன்
நினைவுகள் எதிரியாக, சிந்தனையை வேறுக்கலானேன்
காரியம் பெரிதுமின்றி, எனக்குள் ஐக்கியமானேன் !!!

தூரம் அது தடை இல்லை
வாழ்த்த வேறு வழி இல்லை
உன் அருகில் நான் இல்லை
என்ற கவலை இனி இல்லை

வாழ்த்த இங்கு மனம் உண்டு
எப்பொழுதும் உன் நினைவும் உண்டு

நீ கேட்பதெல்லாம் நடந்திட,
நீ நினைபதெல்லாம் கை கூட,
இறைவனிடம் வேண்ட நான் உள்ளேன்
எப்பொழுதும் உனக்காக நான் உள்ளேன் :)

மனமாற்றம்

பனி மூடிய மேகமாம்
என் மனதை நானே அறியேன்.
காரிருள் நேரமாம்
என் பாதை வழி மறந்தேன்.
புரியாத பாரம் ஒன்று
மனதோரம் கணத்த கனம்,
கலங்கரை விளக்கம் தன்னை
கண்ட முகம் மலர்ந்ததடி -
புன்முறுவல், அது தெரிந்ததடி.

கடலோர அலைகள் -
கரை மோதும் மாலை நேரம்,
கவி பாடும் இளங்குயில்கள் -
குடில் செல்லும் இனிய பொழுது,
விடியலிலிருந்து சுமந்த பாரம்
மனதிலிருந்து நான் இறக்க,
மாலை நேர பூங்காற்று -
மனதில் அடித்தது மெல்லிசையாய்.

யாரோ அவனுக்கு

கவிதை எழுத திறன் ஒன்று போதும். அனுபவம் தேவையில்லை. கீழ்க்காணும் கவிதை வெறும் கற்பனையே. யாரையும் எண்ணி எழுதவில்லை.

———————————————————————————————————————–

என் அருகில் வந்தமர்ந்தான்,

என் நிலையை நான் மறந்தேன்.

என் மனதில் குடி புகுந்தான்,

என்னையே நான் மறந்தேன்.

தன் பார்வை தனை செலுத்தி

என் விழியை கலங்கடித்தான்.

தன் முத்துப் பேச்சினால்,

என் இருப்பை மகிழ்வித்தான்.

பார்த்தது போதுமென்றேன் -

என் பக்கமே நின்றான்,

பேசியது போதாதென்று

சொற்பொழிவு ஆற்றி நின்றான்.

மழைச் சாரல்

ஒரு ஜன்னல்,  உள்ளே  நான், வெளியே மழை. காட்சியோ அழகு, காண கண் கோடி இல்லை எனக்கு. மழையில் ஆட மணம் உண்டு, மார்க்கம் இல்லை. வகுப்பில் சிக்கி தவித்த எனக்கு இருந்தது கையில் ஆயுதம். கால் நடனமாடவில்லை. கை விரல்கள் ஆடின. விளைவு இக்கவிதை.

உணர்ந்தது கடல், எழுதியது ஒரு துளி.
-----------------------------------------------------------------------------------------------------------------------
சிந்திய துளி உங்கள் பார்வைக்கு :
 
வானத்தில் வேடிக்கை -
மத்தாப்புக்கள் வெண் மின்னல்கள்.
கணீர் குரலோசையாம் இடி மத்தளங்கள்,
ஊர்வலமாய் மழைத் தோரணங்கள்.
 
முதல் துளி மண்ணில் விழ,
நறுமணமாம் மண் வாசனைத் தான் பரவ,
என் மணம் மகிழ்ச்சியில் துள்ளி ஆட,
அழகு மயிலின் ஆட்டம் தோற்றதடி.
 
ஜோவென பொழியப் பொழிய,
நனைய நனைய மனம் அது குளிர்ந்தாடி.
சிறு பிள்ளையென நான் தத்தி ஆட,
ஆனந்தம் உச்சத்தைக் கண்டதடி.

என் உயிர் தோழி

நாடு கடந்த பறவை ஒன்று
தனிமையில் வாட கண்டு
உருகினேன் தோழி இங்கு
உன் நிலையை நான் அறிவேன் என்று.

நினைத்த கனம் ஓடி வர
மனம் உண்டு வழி இல்லை.
எண்ணியதை பேச மொழி உண்டு
நேரம் அது மிக இல்லை.

உன்னருகே நானிருந்தால்
மகிழ்வுற்றிருப்பேனடி -
உன்னுடன் இருப்பதால் அல்ல,
உன்னை சிரிக்க வைத்ததால்.

என்னருகே நீ இருந்தால்
மிதந்திருப்பேனடி -
ஆனந்தம் காரணம் அல்ல,
நீ இருத்தல் ஒன்றே போதுமென்பேன்.

நட்பானது…

காலை கதிரில் நான் விழித்து,

விடிந்தது என்று காத்திருந்தேன்.

பாலைவனமாம் தீவு தன்னில்,

அவனைத் தேடி நின்றேன்.

கைப்பிடித்த காதலன் அல்ல -

தோள் கொடுத்த தோழனாம்.

கண்ணில் நிற்கும் கள்ளன்னல்ல -

மனதில் பதிந்த நண்பனாம்..

தமிழ் வளர்ப்போம்

என் உயிராம் தமிழ் மொழி தன்னில் நான் எழுத என்ன பாக்கியம் செய்தேனோ !

இந்த பக்கத்தில் என் கவிதைகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளப் போகிறேன்.

மனதில் தோண்றியதை எழுதுகிறேன். பிழை இருப்பின் மண்ணிக்கவும்.

Follow

Get every new post delivered to your Inbox.